
தென்காசி மாவட்டம் ஆலப்பட்டி பகுதிக்கு கடந்த 21 ஆம் தேதி வட மாநில இளைஞர்கள் 6 பேர் 2 இரு சக்கர வாகனங்களில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி கிராமத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ராஜபுஷ்பம் என்ற மூதாட்டியிடம் சென்று நகைகளை பாலிஷ் செய்து தருவதாக கூறிய போது, அதனை நம்பிய மூதாட்டி 16 கிராம் எடை கொண்ட நகையை அவர்களிடம் கொடுத்தார்.
அதனை அந்த இளைஞர்கள் கெமிக்கலில் பாலிஷ் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராஜபுஷ்பத்தின் மகன் வடமாநில இளைஞர்கள் மீது சந்தேகமடைந்தார். உடனடியாக அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் நகையை கேட்ட போது அவர்கள் நகையை கொடுத்துவிட்டு சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து ராஜபுஷ்பம் தங்க நகையை எடை பார்த்தபோது 2 1/2 கிராம் குறைவாக இருந்தது தெரிய வந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தபோது 6 வடமாநில இளைஞர்கள் சிவலார் குளம் விலக்கு பகுதியில் நின்று கொண்டிருந்ததை காவல் துறையினர் கண்டதும் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் மூதாட்டியிடம் தங்க நகை பாலிஷ் போடுவது போன்று நகையை திருடியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 1/2 கிராம் நகை மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.