தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோவிலூரான் கொட்டாய் கிராமத்தில் விவசாயியான சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அறுவடை செய்த கரும்புகளை டிராக்டரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். அந்த டிராக்டரை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடமடை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதனால் கரும்பு கட்டுகள் சாலையில் சிதறி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக முருகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் பொக்லைன் இந்திரம் மூலம் டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் கரும்புக்கட்டுகள் லாரியில் ஏற்றி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.