டோமினோஸ் பீட்சா அவுட்லெட் ஒன்றின் மேலாளர், ஏழைச் சிறுவர்கள் சிலரை கடைக்குள் அனுமதிக்க மறுப்பதாகக் கூறப்படும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பாகுபாடு, சுகாதாரம் மற்றும் மனித கண்ணியம் குறித்த விவாதத்தை இந்தக் காணொளி கிளப்பியுள்ளது. அந்தக் காணொளியின் தொடக்கத்தில், சமூக ஊடகப் பிரபலமும், உள்ளடக்கத்தை உருவாக்குபவருமான ஒரு நபர் மேலாளரின் முடிவை கேள்வி எழுப்ப, மேலாளரோ படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்று கூறி அவரைத் தடுக்கிறார்.

 

அதற்கு அந்தப் பிரபலம், “நான் சமூக ஊடகப் பிரபலம், நான் பேசுவேன்” என்று கூறி, தொடர்ந்து மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்துப் பல சமூக ஊடகப் பயனர்கள் டோமினோஸ் நிர்வாகத்தைப் பலமாகக் கண்டித்துள்ளனர். “இது வெளிப்படையான அராஜகம்”, “ஆடை, தோற்றத்தைப் பொறுத்தே வாடிக்கையாளர்களை நடத்துகிறார்கள்” என்றும் விமர்சனம் எழுந்தது.

அதே வேளையில், மேலாளரின் முடிவை சுகாதாரம் மற்றும் பிற வாடிக்கையாளர்களின் வசதியைக் காரணம் காட்டி சில பயனர்கள் நியாயப்படுத்தினர். மேலும், லைக்ஸ் மற்றும் பார்வைகளுக்காக ஏழைச் சிறுவர்களைப் பயன்படுத்தி நாடகம் செய்கிறார் என்று குற்றம் சாட்டி, அந்தச் சமூக ஊடகப் பிரபலத்தைப் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

எனவே, குழந்தைகளுக்குப் பொது இடங்களில் அனுமதி மறுக்கக் கூடாது என்று சிலர் வாதிட, உணவகங்கள் சுகாதார விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று மற்றவர்கள் கூறியதால், இந்தச் சம்பவத்தின் சிக்கல் வெளிப்பட்டுள்ளது. இது குறித்து டோமினோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுமா என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.