சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரை உயர்த்திய தடகள வீரர்களுக்கு, நம் நாட்டு ரயிலிலேயே நேர்ந்த கசப்பான அனுபவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி போல் வால்ட் வீரர்களான தேவ் மீனா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர், பெங்களூருவில் இருந்து போபால் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்தபோது மகாராஷ்டிராவின் பன்வெல் நிலையத்தில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

தேசிய சாதனையாளரான தேவ் மீனா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர், சுமார் 5 மீட்டர் நீளம் கொண்ட தங்களது ‘போல்’ (Pole) கம்பிகளுடன் பயணம் செய்தனர்.

சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த விளையாட்டு உபகரணங்களை “சட்டவிரோதப் பொருட்கள்” என்று கூறிய டிடிஇ (TTE), அவர்களை ரயிலில் இருந்து இறங்கச் சொல்லியுள்ளார்.

அபராதம் கட்டத் தயார் என்று கூறியும் அதிகாரிகள் கேட்காததால், பன்வெல் ரயில் நிலையத்தில் 5 மணிநேரம் அந்த வீரர்கள் தவித்துள்ளனர்.

“சர்வதேச வீரர்களுக்கே இந்த நிலைமை என்றால், ஜூனியர் வீரர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது” என தேவ் மீனா கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.