அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியது. அதன் பிறகு நாடாளுமன்ற கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் அதானி குழுமம் பற்றி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால் மத்தியில்ஆளும்  பாஜக அரசு அதானி குழுமம் பற்றி விவாதம் நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் அதானி குழுமம் மீது விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஒப்புதல் தெரிவித்தது.

அதானி குழுமம் மீது தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்த நிலையில், அதானி குழுமம் முறைகேடு தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் விசாரணை குழுவை அமைத்தது. இந்நிலையில் அதானி குழும விஷயத்தில் தவறு நடந்திருந்தால் யாரும் தப்பிக்க முடியாது என தற்போது உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் விசாரணை குழுவை அமைத்துள்ளது. தற்போது இது தொடர்பாக SEBI விசாரணை மேற்கொண்டு வருகிறது. நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் அதானி குழுமம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என 18 எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வரும் நிலையில் அதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.