தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்று பேசியுள்ளார். அதாவது கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. உலக அறிவை வளர்த்துக் கொள்ளவும், பகுத்தறிவுடன் சிந்திக்கவும் கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவர் வாழ்வில் கற்கின்ற கல்வி ஒருபோதும் கைவிடாது. அதன் காரணமாகத்தான் கல்வியை யாராலும் திருட முடியாத சொத்து என கூறுகின்றனர். இந்த கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் நீதி கட்சி காலத்தில் இருந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய திராவிட மாடல் அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முதன்மையான திட்டம் நான் முதல்வன் திட்டமாகும். இதன் மூலமாக மாணவ, மாணவிகளை முதன்மையானவர்களாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். உயர்கல்வியில் கற்பதற்கு நல்ல முறையில் வேலை வாய்ப்பை பெற ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதற்கான பாடத்திட்டம், பாடவேளை, ஆசிரியர் போன்றவற்றிற்கான ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்தார்களா? என்பதை உறுதி செய்யும் விதமாக பல்வேறு முயற்சிகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டம்.

மாணவிகள் அனைவரும் உயர்கல்வியை பெரும் விதமாக புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகள் பயன்பெறும் விதமாக மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.
அதேபோல் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு தொழில் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவது அதிகரித்து இருக்கிறது. மேலும் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

இல்லம் தேடி கல்வி.

கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை பூர்த்தி செய்யும் விதமாக இல்லம் தேடி  கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த திட்டத்தில் இரண்டு லட்சம் மாணவர்கள் 35,000 தன்னார்வளர்கள் உடன் இருந்தனர். இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கும் விதமாக என்னும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டவும் அன்றாட கணிதத்தை கற்றுத்தரும் விதமாகவும் வானவில் மன்றம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக வகுப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் அறிவியலை உற்சாகமாக மாணவர்கள் கற்கின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலா.

தமிழ்நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு கலை திருவிழாக்கள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் வரும் மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். மேலும் உலகளாவிய பார்வை கிடைக்கும் விதமாக அரசு பள்ளிகளில் திரையிடல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேன்சிட்டு  என்ற இதழ் மாதம்தோறும் வெளியாகிறது. கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2000 கோடி மதிப்பில் புதிய கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் மாணவர்கள், நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் பயின்ற அரசு பள்ளிக்கு உதவி வருவதாக கூறியுள்ளார்.