
சென்னை ரத்தினபுரத்தில் அசோகன்-புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். அசோகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களாக இவர்களுடைய வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் கதவை தட்டி பார்த்தார்.
அப்போது கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு அசோகன் மற்றும் புனிதா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் இவர்களுடைய மகன்கள் கோடை விடுமுறையில் தாத்தா வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.