இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை  செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் அணுகுமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு சில மாதங்களாகவே கொரோனா பரவலின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளதால் கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொற்றை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இந்தியாவில் மார்ச் 8-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் 2082 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று மார்ச் 15-ஆம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,264 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை பெற்ற வெற்றிகளை இழக்காமல், தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆபத்து மதிப்பீடு அடிப்படையிலான அணுகு முறையை பின்பற்ற வேண்டிய அவசியமும் உள்ளது என பூஷன் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மீண்டும் கொரானா பரவல் தாக்கத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதால் மீண்டும் கொரானா பரவலால் ஊரடங்கு வருமோ என்ற அச்சம் நிலவுகிறது.