நாகாலாந்து மாநிலம் திமாப்பூர் ரயில் நிலையம் அருகே, 65 வயது முதியவர் ஒருவர் தனது மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனத்தை ஓட்டிக்கொண்டு திடீரென ரயில் தண்டவாளத்திற்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவில், பர்மா கேம்ப் மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் ஏறிய அந்த வாகனம், எதிர்பாராதவிதமாக தண்டவாளத்திலேயே சிக்கிக்கொண்டது.

தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வாகனத்தை அப்புறப்படுத்தினர். நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் ரயில்கள் எதுவும் வராததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபரீதச் சம்பவம் தொடர்பாக அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டிய அந்த முதியவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மதுபோதையில் இருந்ததாகச் சமூக வலைதளங்களில் பேசப்பட்டாலும், ரயில்வே சட்டத்தின் (பிரிவு 153, 147) கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ரயில் தண்டவாளத்தில் வாகனங்களை ஓட்டுவது சட்டவிரோதமானது மற்றும் உயிருக்கு ஆபத்தானது” என நாகாலாந்து காவல்துறை பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்டவாளத்தில் வாகனம் சிக்கியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, முதியவரின் பொறுப்பற்ற செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.