புகையிலை சிகரெட்டுகளை விட மிக கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்ட போதிலும், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களிலும், பொழுதுபோக்கு மன்றங்களிலும் அவை தடையின்றி தலைவிரித்தாடுகிறது. இ-சிகரெட்டுகளின் தீமைகள் குறித்து அறியாமல் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருவது பெரும் கவலையை தருகிறது.

இந்நிலையில் ஆபத்தான இ-சிகரெட்டுகளின் பிடியிலிருந்து இளைஞர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் சட்டவிரோதமாக நடக்கும் இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு தமிழக அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்றும் இ-சிகரெட்டுகளில் உள்ள வேதிப்பொருட்கள் பலவகையான புற்றுநோய், இதய நோய்களை ஏற்படுத்தக்கூடியவை எனவும் அவர் எச்சரித்துள்ளார்.