நடப்பாண்டு நாட்டின் பல பகுதிகளில் கடும் குளிரும், அடர் மூடுபனியும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளன. இத்தகைய கடும் குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் பல்வேறு புதிய வழிகளைக் கையாண்டு வரும் நிலையில், சந்தையில் அறிமுகமாகியுள்ள ஒரு வினோதமான ஜாக்கெட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
பார்ப்பதற்குப் புடவை அல்லது துப்பட்டா போன்ற நீண்ட அமைப்பைக் கொண்டுள்ள இந்த ஜாக்கெட், சாதாரண ஆடைகளைப் போல் அணியாமல், உடல் முழுவதும் இரண்டு அல்லது மூன்று முறை சுற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இறுதியில் அதன் ஜிப் பகுதியை மூடினால், உடலில் காற்று புகாதவாறு முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த ஜாக்கெட்டின் வீடியோ, தற்போது ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. பாரம்பரிய ஜாக்கெட்டுகளை விட இது அதிக வெப்பத்தை அளிப்பதாகவும், ஆடை அணிவதில் ஒரு புதிய ஃபேஷனை உருவாக்குவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உடலைச் சுற்றி பல அடுக்குகளாக அமையும் இந்த வடிவமைப்பு, உடல் வெப்பம் வெளியேறாமல் தடுக்க உதவும் எனப் பயனர்கள் நம்புகின்றனர்.
அதே வேளையில், இந்த ஆடையின் எடை மற்றும் அதன் விலை குறித்த கேள்விகளையும் சிலர் எழுப்பியுள்ளனர். எது எப்படியோ, உறைபனிக் குளிரைச் சமாளிக்க இது ஒரு ‘சக்திவாய்ந்த ஆயுதம்’ என்று பலரும் இதனைப் பாராட்டி வருகின்றனர்.
