சமூக ஊடகங்கள் இப்போது வெறும் கருத்துப் பரிமாற்றத்தோடு நின்றுவிடவில்லை; இளைஞர்களுக்கு புதிய வருமான வழியாக மாறி வருகிறது. தங்கள் படைப்பாற்றல், அனுபவங்கள் மற்றும் யோசனைகளைப் பகிர்ந்து, பல இளைஞர்கள் புகழையும் பணத்தையும் அள்ளுகின்றனர்.
பிராண்டுகளும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இந்தக் கிரியேட்டர்களைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார் 21 வயது இன்ஜினியரான கனவ்.
இவர், X தளத்தில் தனது பதிவுகள் மூலம் மாதம் 32,000 ரூபாய் சம்பாதித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதை நிரூபிக்கும் வகையில், தனது வருமானத்தின் ஸ்க்ரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார்.
posting on x is already paying me more than average tier 3 campus placement and I literally only started 2 months ago pic.twitter.com/KRl9HdSYm4
— kanav (@kanavtwt) September 15, 2025
கனவ் தனது X பதிவில், வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த தளத்தில் செயல்படத் தொடங்கியதாகவும், இப்போது அவரது கல்லூரியின் சராசரி வேலைவாய்ப்பு ஊதியத்தை விட அதிகமாக சம்பாதிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் பரவ, சுமார் இரண்டு லட்சம் பேர் இதைப் பார்த்து, வியந்து பேசி வருகின்றனர். “இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு வளர்ச்சியை எப்படி அடைந்தீர்கள்?” என்று ஒரு பயனர் ஆச்சரியமாகக் கேட்டுள்ளார்.
மற்றொருவர், “அடுத்து ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் எப்போது கலந்துகொள்கிறீர்கள்?” என்று கேலியாகக் கேட்டுள்ளார். கனவின் வெற்றி, கார்ப்பரேட் வேலைகள் மட்டுமே வெற்றிக்கு வழி இல்லை என்பதை உணர்த்துகிறது.
படைப்பாற்றல், தொடர்ந்த முயற்சி மற்றும் உள்ளடக்கத் திறன் இருந்தால், X போன்ற தளங்களில் விளம்பரங்கள், பிராண்டு ஒத்துழைப்பு மற்றும் பார்வைகள் மூலம் கணிசமான வருமானம் ஈட்ட முடியும் என்பதற்கு கனவ் ஒரு உதாரணம்.
