
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கோணம் பகுதியில் சிஜு 20 என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோயிலில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரும் மாத்தூர்கோணம் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் இருவர்களின் வீட்டிற்கு தெரிய வரவே ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சுமூகமாக பேசி இளம் பெண்ணின் கல்லூரி படிப்பை முடித்த பின்பு திருமணம் செய்து கொடுப்பதாக முடிவெடுத்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் மீண்டும் கருத்து வேறுபாடு வந்துள்ளது.
அதேபோன்று அவரது அண்ணனுக்கு அப்பெண் காதல் திருமணம் செய்வது பிடிக்கவில்லை. அதனால் அவர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இளம்பெண்ணின் அண்ணன், சிஜுவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இளம்பெண்ணின் அண்ணன் தனது தங்கையிடம் பேசக்கூடாது என்றும் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் எங்கள் வீட்டில் அருகே வந்து பார் என்று சவால் விடுத்துள்ளார். அப்போது சிஜூ வருவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் சிஜூ இளம் பெண்ணின் வீட்டிற்கு அருகே வந்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்து அவரது அண்ணன் சிஜுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இளம்பெண்ணின் அண்ணன் சிஜுவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிஜு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணனை தேடி வருகின்றனர்.