ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய விறுவிறுப்பான போட்டியில், பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த ஒரு ‘ரிலே கேட்ச்’ ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா அடித்த பந்தை எல்லையருகே எகிறிப் பிடித்த ஸ்ரேயாஸ், தான் எல்லைக்கோட்டிற்கு வெளியே விழுவதற்குள் மிகச் சரியாக சேவியர் பார்ட்லெட்டிடம் பந்தை வீசி அவுட் ஆக்கினார்.

இந்த அசாத்தியமான ஃபீல்டிங்கைப் பார்த்த ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். மைதானத்தில் இருந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்த கேட்சைப் பார்த்து எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.

 

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின், “இது வெறும் உடல் வலிமை மட்டுமல்ல, பந்தின் வேகம், எல்லைக்கோடு இருக்கும் தூரம் மற்றும் சக வீரர் எங்கே இருக்கிறார் என்பதை ஒரு நொடியில் கணிக்கும் அசாத்திய அறிவு. ஸ்ரேயாஸ் ஐயர் எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்துள்ளார். நான் நேரில் பார்த்த சிறந்த கேட்ச்களில் இதுவும் ஒன்று” எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

கேட்ச் முடித்ததும் ஸ்ரேயாஸ் ஐயர் காதுகளில் கை வைத்து ரசிகர்களின் சத்தத்தை ரசித்த விதம் மைதானத்தையே அதிர வைத்தது. இந்தப் போட்டியில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ், இந்த சீசனில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று, தோல்வியே அடையாத ஒரே அணியாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக உள்ளது.