சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு இளைஞர் உயிரைப் பணயம் வைத்து ரயில் பாதையில் படுத்து, ரயில் மேலே செல்லும்போது எடுக்கப்பட்ட காட்சியால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் நிதி அம்பேத்கர் என்ற பயனர் பகிர்ந்த இந்த வீடியோவில், ஒருவர் இளைஞரை ரயில் பாதையில் படுக்கச் சொல்லி வழிநடத்துகிறார்.

ரயில் கடந்து சென்றவுடன், அந்த இளைஞர் உற்சாகத்தில் குதித்து எழுகிறார். இந்த வீடியோவுக்கு கீழே, “ரீல்ஸ் எடுக்கும் ஆசையில் மக்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள், இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ 4 லட்சத்துக்கும் மேல் பார்வைகளைப் பெற்று, மக்களிடையே கோபத்தையும் விமர்சனத்தையும் தூண்டியுள்ளது.

பல எக்ஸ் பயனர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, “இந்த ரீல் கலாசாரம் நாட்டின் நலனை அழிக்கிறது, உண்மையான உள்ளடக்கத்தை விட இம்மாதிரியான முட்டாள்தனமான செயல்கள் மேலோங்குகின்றன” என கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு, இந்தச் சம்பவத்தின் இடம் குறித்த விவரங்களைப் பகிருமாறு கேட்டுள்ளது.

இதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேசத்தில், குசும்பி ரயில் நிலையம் அருகே இதேபோன்று ரயில் பாதையில் படுத்து வீடியோ எடுத்த ரன்ஜித் சௌராசியா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இம்மாதிரியான ஆபத்தான செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தேவை என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.