கேசவ் மகராஜ் பேட்டிங் செய்ய வரும்போது ராம் சியா ராம் பாடல் ஓடும்போது விராட் கோலி  கைகளை மடக்கி ஸ்ரீ ராமர் வில்லை  வளைப்பது போல செய்த செய்கை வைரலாகி வருகிறது..

செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1:30 மணி முதல்நடைபெற்று வருகிறது.

இந்தபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் சென்றனர். தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக கைல் வெர்ரின்னே 15 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இந்திய அணியில் முகமது சிராஜ் 9 ஓவர்கள் வீசி 3 மெய்டன் ஓவர்களுடன் 1.67 எக்கனாமியுடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.  இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனபோதிலும் ரோஹித் சர்மா பொறுப்பாக ஆடி 50 பந்துகளில் 39 ரன்களும், சுப்மன் கில் 55 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து வெளியேறினர். பின் வந்த ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட் ஆனார். தொடர்ந்து விராட் கோலி (42 ரன்கள்)- ராகுல் ரன் எடுக்காமலும் ஆடி வருகின்றனர். இந்திய அணி தற்போதுவரை 30 ஓவரில் 138/4 என ஆடி வருகிறது..

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 34/6 என பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ‘ராம் சியா ராம்’ பாடல் ஒலிக்கும் போது விராட் கோலி கைகளை மடக்கி வில் சரத்தை இழுத்து ஸ்ரீ ராமரைப் போல போஸ் கொடுத்தார். கேசவ் மஹாராஜ் பேட்டிங் செய்ய வரும்போது ராம் சியா ராம் பாடல் ஒலிக்க விராட் கோலியின் அழகான செய்கை ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது..