பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை 4:30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் கூறுகிறது. ஏதேனும் பயங்கரவாத செயலா..? (அ) வேறு எதாவது காரணமா? என ராணுவம் விசாரணையை துவங்கியுள்ளது.

மேலும் விரைவு நடவடிக்கை குழு தீவிரப்படுத்தப்பட்டு ராணுவ முகாமிற்குள் தீவிர சோதனை நடந்து வருகிறது. அந்த பகுதி முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் ராணுவ முகாமில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறை தெரிவித்து உள்ளது.

பஞ்சாப் ராணுவ முகாமில் 2 நாட்களுக்கு முன் 28 குண்டுகளுடன் துப்பாக்கி மாயமாகி இருந்த நிலையில், தற்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று உள்ளது. ஆகவே துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் இருக்கிறது. பதிண்டா ராணுவ கண்டோன்மெண்ட் வாயிற் கதவுகள் மூடப்பட்டு சோதனை நடந்து வருகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.