தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் புஷ்பா திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சுகுமார் இயக்க ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான சூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ரஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 வில் நடிக்கிறார். இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாகவும் 10 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

நடிகை சாய் பல்லவி பழங்குடியின பெண்ணாக நடிப்பதாகவும் படத்தில் அவரின் கதாபாத்திரம் சர்ப்ரைசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்பிறகு புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வீடியோ ஏப்ரல் 8-ம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.சுமார் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட புஷ்பா திரைப்படம் 350 கோடி வரை வசூல் சாதனை புரிந்திருந்தது. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் உள்ள திரையரங்க உரிமைகள் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் 1000 கோடி வசூலித்த புஷ்பா 2 திரைப்படம் ராஜமவுளியின் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் சாதனையையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.