கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்தது. நேற்று காலை காட்டுகொள்ளை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரியான ராம்குமார்(27) என்பவர் மோட்டுப்பட்டி அருகே இருக்கும் மலையடிவார பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த காட்டு யானைகளுக்கு அருகே சென்று ராம்குமார் செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது.

அதே நேரம் வேகமாக ஓடி வந்த ஒரு யானை துதிக்கையால் ராம்குமாரை தூக்கி வீசி காலால் மிதித்ததால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ராம்குமார் இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் ராம்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.