தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சேலூர் அம்மாபாளையத்தில் தி.மு.க கிளை செயலாளரான மாதையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன் தீபக்குடன் மோட்டார் சைக்கிளில் தும்பல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அம்மாபாளையம் பிரிவு சாலை காட்டு பகுதியில் சென்ற போது திடீரென வந்த காட்டெருமை மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாதையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீபக் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாதையனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.