தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஆதிரா தனது தாத்தா மகேந்திரனுடன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து மகேந்திரன், ஆதிரா மீது விழுந்தது.

இதில் படுகாயமடைந்த ஆதிராவை அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஆதிரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மழை பெய்ததால் சுவர் நனைந்து இருந்தது. நேற்று முன்தினம் குழந்தை தாத்தாவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் விழுந்தது தெரியவந்தது.