கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குத்திபாறையில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழியாறு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபு கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளார். சம்பவம் நடந்த அன்று அதே பகுதியில் வசிக்கும் அஜித்குமார் என்பவர் மது போதையில் தனது மனைவியுடன் தகராறு செய்தார். இதனை பார்த்த பிரபு கணவன், மனைவி இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது அஜித் குமார் பிரபுவுடன் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் அவரை திட்டி, அவரது ஆள்காட்டி விரலை கடித்தார். இதனால் படுகாயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தைகள் திட்டுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் அஜித்குமார் மீது வழக்குபதிந்து அவரை கைது செய்தனர்.