திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வசிக்கும் இளம்பெண் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கல்லூரி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு செல்லும் போது மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவி அளித்த புகாரின் பேரில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மாணவர்கள் மாணவியின் கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எப்படி எங்களை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம் என கேட்டு தகராறு செய்ததால் வாக்குவாதம் முற்றியது.
நேற்று மாணவியின் கணவர் உட்பட சிலர் வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர்களுக்கும், மாணவியின் கணவர் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.