திருச்சி மாவட்டத்தில் உள்ள நம்பர்-1 டோல்கேட் குறிஞ்சி நகரில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயராணி(63) தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விஜயராணியின் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்த செல்போன் எண்ணை விஜயராணி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் விஜயராணியிடம் வேலை கொடுப்பதற்கு வங்கி ஏ.டி.எம் உள்ளிட்ட விவரங்களை தருமாறு கேட்டுள்ளார்.

இதனை நம்பி விஜயராணி அனைத்து தகவல்களையும் அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 848 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயராணி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.