திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாசிலாமணிபுரத்தில் கபிலன்-எலிசபெத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். பட்டதாரியான எலிசபெத் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குரும்பபட்டி பகுதியில் வசிக்கும் மணி என்பவர் கல்வித் துறையில் தனக்கு பல அதிகாரிகளை தெரியும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி எலிசபெத், அவரது உறவினர் ஆல்வின் சம்பத்குமார் ஆகியோர் மணியிடம் 6 1/4 லட்ச ரூபாயை கொடுத்தனர்.

இதேபோல் சுகுந்தாமேரி என்பவரிடமும் மணி 3 1/2 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணியை கைது செய்தனர். இவர் சாணார்பட்டி ஒன்றிய அ.தி.மு.க மீனவர் அணியின் முன்னாள் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.