ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என்.கே ரோடு பகுதியில் வள்ளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் வள்ளியப்பன் தனது ஏஜென்சி கணக்குகளை தணிக்கை செய்த போது 20 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வள்ளியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்த சாந்து முகமது என்பவர் மோசடி செய்தது தெரியவந்தது. அவர் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து ஏஜென்சி கணக்கில் வரவு வைக்காமல் சுமார் 20 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த சாந்து முகமதுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.