செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்ற 2000-2012-ம் வருடம் வரை பதிவுசெய்யப்பட்ட 9 பத்திரங்களை போலியானவை என அறிவித்து, அதை ரத்துசெய்யக் கோரி நடேசன் என்பவர் மாவட்ட பதிவாளரிடம் புகாரளித்தார். அதன்படி இந்த ஆவணங்கள் உண்மையானவை என ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஹரிநாத் என்பவருக்கு, மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்யவேண்டும் என ஹரிநாத் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது போலி ஆவணங்கள் என சொல்லி அதனை ரத்துசெய்ய கோரி நடேசன் தாக்கல் செய்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில், இப்புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆவணங்கள் மோசடியாக பதிவுசெய்யப்பட்டுள்ளதா என விசாரிக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் இருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட நோட்டீஸ் அனுப்பியதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும், மோசடி ஆவணங்கள் பற்றி மாவட்ட பதிவாளரிடம் புகாரளிக்கும் உரிமையை பறிக்கமுடியாது எனவும் தெளிவுபடுத்தினார். அதோடு இவ்வழக்கில் மாவட்ட பதிவாளரின் நோட்டீசுக்கு 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என்று மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இருதரப்பினரின் கருத்துக்களை கேட்டு 12 வாரங்களில் புகார் மீது சட்டப்படி முடிவெடுக்கவேண்டும் என மாவட்ட பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்துவைத்தார்.