பி.பி.சி. நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை பற்றிய ஆவணபடம் ஒன்றை 2 பகுதிகளாக வெளியிட்டது. அதில் 2002-ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி விமர்சிக்கப்பட்டு இருந்ததால், நாட்டின் 74-வது குடியரசு தினத்தில் இந்த ஆவணம் வெளியிட்டது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் பி.பி.சி. ஆவண படத்திற்கு கண்டனம் வெளியிட்டதை தொடர்ந்து,  மத்திய அரசு சார்பில் தடை விதித்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, பி.பி.சி. ஆவண பட தடை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசியபோது, உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரம் முக்கியம் என்பதற்கு நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம். மேலும் கருத்து சுதந்திரம், மதம் அல்லது அதுசார்ந்த நம்பிக்கையில் சுதந்திரம் போன்ற ஜனநாயகத்தன்மை கொண்ட கொள்கையின் முக்கியத்துவம் குறித்து, நாங்கள்  தொடர்ந்து மேற்கோள்காட்டி வருகிறோம்.

மேலும் இவை அனைத்தும் நமது ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்தும் மனித உரிமைகளாக பங்காற்றி வருகின்றன. எனவே உலக நாடுகளுடனான எங்களது நல்லுறவில் இந்த முக்கிய அம்சம் பற்றி நாங்கள் சுட்டி காட்டி வருகிறோம். இதனையடுத்து இந்தியாவுடனான உறவிலும் கூட இதனை சுட்டி காட்டியுள்ளோம் என்றும்  கூறியுள்ளார்.