உலகின் சிறந்த மருத்துவ வசதிகள் கொண்ட நாடாகப் புகழப்படும் அமெரிக்காவில், மனிதாபிமானம் கேள்விக்குறியாகியுள்ளது. சிறுநீரகக் கல் வலியால் துடித்த ஒரு நோயாளி, ஒன்றரை மணி நேரமாக சிகிச்சை அளிக்க அறை ஒதுக்கப்படாமல் அலறிக் கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வலியால் உதவி கேட்டு கதறும் ஒரு நோயாளியைப் பார்த்து, “வாயை மூடு அல்லது வெளியே போ” என்று மருத்துவமனை நிர்வாகம் மிரட்டுவது, அந்த நாட்டின் சுகாதாரத் துறை எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதையே காட்டுகிறது. வளர்ந்த நாடு என்று பெருமை பேசும் இடத்தில், ஒரு சாமானிய மனிதனுக்குக் கிடைக்கும் மரியாதை இவ்வளவுதானா என்ற கேள்வி எழுகிறது.



​மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்திய அரசு மருத்துவமனைகளில் எவ்வளவுதான் கூட்ட நெரிசல் இருந்தாலும், வலியோடு வரும் ஒரு நோயாளியை விரட்டும் கலாச்சாரம் இங்கே இல்லை. வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளியின் வலியையும் உணர்வையும் மதித்து சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால், கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கும் அமெரிக்க மருத்துவ முறையில் மனிதாபிமானம் மரணித்துவிட்டதை இந்த காணொளி அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. வலி தாங்காமல் கத்தும் நோயாளிக்கு மருந்தைக் காட்டிலும், ஆறுதலும் விரைவான சிகிச்சையுமே தேவை; ஆனால் அவருக்குக் கிடைத்தது அவமானமும் அலட்சியமுமே.