சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துவர்ணபட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து இருப்பதால் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி ஏற்கனவே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் காலி குடங்களுடன் பெண்கள் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.