தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலகரத்தில் பொதுமக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நேற்று மதியம் மேலகரம் வடக்கு தெருவில் கழிவுநீர் கலந்தது போன்று கருப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

இதனால் நிர்வாகம் குடிநீர் வினியோகத்தை நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ஏற்கனவே 3 முறை இது போன்ற கழிவுநீர் கலந்தது போல குடிநீர் வந்தது. இதனால் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்தை தோண்டி பார்த்து சரி செய்தனர். மீண்டும் இதே போன்ற குடிநீர் வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.