ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு மருத்துவ மாணவி, தான் பயன்படுத்திய வயர்லெஸ் இயர்பட் திடீரென வெடித்ததில் தனது காது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளத்தில் ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘JBL Tune Beam 2’ ரக இயர்பட்டை ஒரு மாதத்திற்கு முன்புதான் பரிசாகப் பெற்றதாகவும், இசையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது வலது பக்க இயர்பட் திடீரெனச் சத்தத்துடன் வெடித்ததாகவும் அந்த மாணவி குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலால் அவரது காது சவ்வில் வீக்கம் ஏற்பட்டுள்ளதோடு, அவருக்குத் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து அந்த மாணவி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட மருத்துவ அறிக்கையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தைத் டேக் செய்து நீதி கேட்டுள்ள நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள ஜேபிஎல் நிறுவனம், இந்த விவகாரம் தொடர்பாகத் தனது இந்தியக் குழுவை அனுப்பி நேரடி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

வயர்லெஸ் கருவிகள் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில், தரம் குறைந்த அல்லது கோளாறுகள் உள்ள கருவிகளால் ஏற்படும் இத்தகைய பாதிப்புகள் குறித்துப் பயனர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.