மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்திற்கு பின் அகவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் தொகை வழங்கப்பட்டது. அதன்பின் 18 மாத நிலுவைத்தொகை பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தியை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

அதாவது, சிசிஎஸ் விதிகள் 2021 கீழ் உள்ள விதி 8ஐ மாற்றி உள்ளது. இந்த புது மாற்றத்தின் அடிப்படையில், அரசு ஊழியர்கள் பணியின் போது கவனக் குறைவுடன் அலட்சியமாக செயல்பட்டால் அவர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என எச்சரித்துள்ளது. அதோடு தற்போது பணியின் மீது ஊழியர்கள் ஏதேனும் தவறுசெய்தால், நிதித் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு ஊழியர் தணிக்கை மற்றும் கணக்கு துறையில் இருந்து ஓய்வு பெற்றவராக இருப்பின், அவரின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்தி வைப்பதற்கான அதிகாரம் சிஏஜிக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதேபோன்று ஒரு ஊழியர் ஓய்வுக்கு பின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை பெற்று வரும் நிலையிலும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை பகுதி அளவு (அ) முழுவதுமாக திரும்ப பெறப்படும் என அரசு எச்சரித்துள்ளது.