ஒரு இந்திய நிறுவனம் தீபாவளி விழாவிற்காக தனது ஊழியர்களிடம் 1200 ரூபாய் கட்டணம் கேட்டு, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரெடிட் தளத்தில், நிறுவனத்தின் வாட்ஸ்அப் உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலாகி, நெட்டிசன்களை கோபமடைய வைத்துள்ளது.
பொதுவாக, தீபாவளி போன்ற சிறப்பு நாட்களில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி, ஆடம்பரமான விருந்து ஏற்பாடு செய்யும். ஆனால், இந்த நிறுவனம் ஊழியர்களிடமிருந்தே பணம் கேட்டு, அனைவரையும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரெடிட் பயனர் ஒருவர் பகிர்ந்த வாட்ஸ்அப் உரையாடலில், நிறுவனத்தின் வருடாந்திர தீபாவளி விழாவிற்கு ஊழியர்களிடம் 1200 ரூபாயும், குழு தலைவர்களிடம் 2000 ரூபாயும் பங்களிப்பு செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது. மிகவும் ஆச்சரியமூட்டும் விஷயம், இந்த விழா ஒரு சலிப்பூட்டும் இடத்தில் நடைபெறுவதாகவும், பங்கேற்பது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சமூக வலைதளங்களில் நிறுவனத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு பயனர், “பங்கேற்க விருப்பமில்லை என்றால், ஊழியர்களை கட்டாயப்படுத்துவீர்களா?” என்று கேள்வி எழுப்ப,
மற்றொருவர், “ஊதிய உயர்வு கொடுக்க மாட்டார்கள், ஆனால் பணம் கேட்பார்கள்” என்று கிண்டலடித்தார். சிலர் இந்நிறுவனத்தை “பிச்சை எடுக்கும் கார்ப்பரேட்” என்று விமர்சித்தனர், மற்றவர்கள் “இது மகிழ்ச்சியை பகிர்வதா, இல்லை ஊழியர்களுக்கு சுமையா?” என்று கேள்வி எழுப்பினர்.
