வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் அடுத்த ஊரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடேசன் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக திருவலம் சுகர் மில்லில் இருந்து அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அந்த வாகனத்தை வெங்கடேசனை நண்பர் சுந்தரமூர்த்தி ஓட்டி சென்றார்.

இந்நிலையில் திருவலம் பழைய காட்பாடி சாலையில் சென்றபோது எதிரே வந்த ஜேசிபி எந்திரம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் சுந்தரமூர்த்தி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரமூர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கடேசனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.