சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை மனோகர் நகர் 2-வது தெருவில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி சாந்தா கோவிலுக்கு சென்று விட்டு பள்ளிக்கரணை குளம் எதிரி வேளச்சேரி பிரதான சாலையை கடக்க முயன்றார். அப்போது மேடவாக்கம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் சாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாந்தா மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சாந்தாவின் 4 மகன்களும், உறவினர்களும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி தனியார் மருத்துவமனையில் அவரது இரு கண்கள், கல்லீரல் ஆகியவை தானம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிய தீனா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.