பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்க இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கும் வகையில், மத்திய அரசு அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. டாக்டர் சசி தரூர் தலைமை வகிக்கிறார். இந்த குழுவின் முக்கிய நோக்கம் – இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வெளிநாட்டு அரசுகளிடம் தெளிவுபடுத்துவதாகும்.

இந்தத் தொடரில், குழுவினர் கடந்த வியாழக்கிழமை கொலம்பியா நாட்டைச் சென்றடைந்து, அங்குள்ள அதிகாரிகளை சந்தித்தனர். முன்னதாக, இந்தியாவின் தாக்குதல்களுக்கு எதிராக பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளை குறித்துப் இரங்கல் தெரிவித்த அறிக்கையை கொலம்பியா வெளியிட்டது. இது இந்திய அரசுக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

“இந்தியாவில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்காமல், பாகிஸ்தானில் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியாவின் அறிக்கை மிகவும் ஏமாற்றத்தை அளித்தது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கொலம்பியா அரசு தனது முந்தைய அறிக்கையை அதிகாரபூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது. கொலம்பியாவின் துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா வில்லாவிசென்சியோ கூறியதாவது:

காஷ்மீரில் நடந்த உண்மை நிலைபாடுகள் குறித்து தெளிவாக புரிந்துகொண்டுள்ளோம். எனவே, முந்தைய அறிக்கையை வாபஸ் பெறுகிறோம். இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை புரிந்துகொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை தொடர நாங்கள் தயார்” என தெரிவித்தார்.

இந்தச் சம்பவம், சர்வதேச அளவில் இந்தியா எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், இது அனைத்துக் கட்சித் தூதுக்குழு முயற்சி வெற்றி பெற்றது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.