கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை எனவும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என திமுக கூறியிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்பவும் துறைரீதியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் நீதித்துறை அதிகாரிகள் இதனை மறுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படாத ஊழியர்களின் விவரங்களை பெறுவதற்காகவே சுற்றறிக்கையை அனுப்பப்பட்டு இருப்பதாகவும் நீதிமன்ற வழக்கிற்காகவே புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.