மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் சனிக்கிழமை காலை வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, தி.மு.க ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறோம். இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கின்றனர். முதல்வரின் பணிகளும், இந்த ஆட்சியின் திட்டங்களும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் ஏறத்தாழ 400 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதனால் சாலையில் கூட சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது. மேலும் புதிய சாக்கடையும், புதிய மழை நீர் வடிகால் பணியும் முடிவுற்றால் மீண்டும் அந்த சாலைகள் புதுப்பித்து தரப்படும். அந்த பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து அ.தி.மு.க ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தனர். அதிலும் குறிப்பாக ஆதரவற்ற முதியவர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது எனும் ஒரு விதியை கொண்டு வந்தனர்.

அதனால் 7.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் உரியவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். ஆண்  வாரிசு இருந்தாலும் ஆதரவற்றவர்களாக இருந்தால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும் நிறுத்தப்பட்டவர்களுக்கும் அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.