வடமேற்கு டெல்லியின் ப்ரேம் நகர் (Prem Nagar) பகுதியில் உள்ள வினய் என்கிளேவில் (Vinay Enclave), விளையாடிக் கொண்டிருந்த 6 வயதுச் சிறுவனை ஒரு பிட் புல் (Pit Bull) வகை நாய் மிகக் கொடூரமாகத் தாக்கியதில், அச்சிறுவன் தனது வலது காதை இழந்துள்ளான்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்தச் சம்பவத்தின்போது, அண்டை வீட்டாரின் வீட்டிலிருந்து திடீரென வெளியே வந்த பிட் புல் நாய், விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளது.

சிறுவனின் அலறல் கேட்டு ஓடி வந்த பெற்றோரும் அண்டை வீட்டாரும் சேர்ந்து போராடிச் சிறுவனைக் காப்பாற்றி, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்தத் தாக்குதலில் சிறுவனின் வலது காதை நாய் கடித்துத் துண்டித்துள்ளது. பிட் புல் நாயின் உரிமையாளரான ராஜேஷ் பால் (Rajesh Pal) என்ற தையல்காரர் மீது ப்ரேம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

கொலை முயற்சி வழக்கில் தற்போது சிறையில் இருக்கும் ராஜேஷ் பாலின் மகன் சச்சின் பால் என்பவர் தான், சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பு இந்த நாயை வீட்டிற்குக் கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுவன் தற்போது டெல்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.