மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடி மல்ஹாரா (Garhi Malhara) பகுதியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. படுவா கிராமத்தைச் சேர்ந்த ரஜு குஷ்வாஹா என்பவர் தனது மனைவி ராம்குன்வர் குஷ்வாஹாவுடன் (40) பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அப்பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

இந்த விபத்தின் நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. விபத்து நடந்தவுடன் தனது மனைவியை உயிரோடு மீட்கத் துடித்த கணவரின் நிலையைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி ஓட்டுநர் தற்போது போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிவேக வாகனங்கள் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.