
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தை கடந்த 1945-ம் ஆண்டு 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகை காலம் வருகிற 2044-ம் ஆண்டு மார்ச் முடிகிறது. அதோடு இந்த நிலத்தை குத்தகைக்கு விடும்போது ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசுகள் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 1970-ம் ஆண்டு வாடகையை உயர்த்துவது குறித்து வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கு பதில் அளித்த ரேஸ்கோர்ஸ் நிர்வாகம் வாடகை உயர்த்துவது குறித்து ஒப்பந்தத்தில் கூறப்படவில்லை என்று தெரிவித்தது.
இதனை மறுத்த அரசு 1970-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை உள்ள வாடகை பாக்கி தொகையான 730.86 கோடி ரூபாயை செலுத்தும் படி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு ரேஸ்கோர்ஸ் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பிய படி 730.86 கோடி வாடகை பாக்கியை அந்நிர்வாகம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அதனை அரசு தன்வசம் படுத்தி, பொதுநலனுக்காக பயன்படுத்தப்படும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில் வாடகை பாக்கியை செலுத்தாததால் ரேஸ் கோர்ஸ் நிறுவனத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எடுக்கப்பட்டுள்ளது.