திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கார்த்திகா தன் தங்கியிருந்த விடுதியில் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திகா உயிரிழந்தார். இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் கார்த்திகாவின் இறப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒட்டன்சத்திரத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு கார்த்திகாவின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.