மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், ரயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் (Divyang Coach) அத்துமீறி நுழைந்து மேல் இருக்கையில் (Upper Berth) காலில் மேல் கால் போட்டு சொகுசாகப் படுத்திருந்த ஒரு நபரை ஆர்.பி.எப் (RPF) போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
ஆர்.பி.எப் உதவி ஆய்வாளர் ரிக்கி ரவீந்திர ராஜாவத் சோதனையில் ஈடுபட்டபோது, காதில் இயர்போன் மாட்டிக்கொண்டு ராஜா போலப் படுத்திருந்த அந்த வாலிபரிடம் விசாரித்தார். மாட்டிக்கொண்ட பயத்தில் அந்த வாலிபர், “சார் என் கால் உடைஞ்சு போயிருக்கு, உள்ளே ராடு (Rod) வச்சிருக்காங்க” என்று அப்பட்டமாகப் பொய் கூறி போலீஸாரையே ஏமாற்ற முயன்றார்.
View this post on Instagram
ஆனால், போலீஸார் விடாமல் “மருத்துவச் சான்றிதழ் எங்கே?” என்று கேட்க, அந்த வாலிபர் உண்மையை உளறிவிட்டார். அவரிடம் டிக்கெட்டும் இல்லை, அந்தப் பெட்டியில் பயணிக்கத் தகுதியும் இல்லை என்பது உறுதியானது. “டிக்கெட் எடுக்க நேரமில்லை, அதான் இங்கே வந்து படுத்தேன்” என்று அந்த வாலிபர் சமாளிக்க, அவரை உடனடியாகக் கீழே இறக்கிய போலீஸார், இனிமேல் இதுபோல மாற்றுத்திறனாளிகளின் உரிமையைப் பறிக்கக் கூடாது என எச்சரித்து ரயிலை விட்டு கீழே இறக்கிவிட்டனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “நடிக்கிறதுல இவரு நம்ம வடிவேலுவையே மிஞ்சிருவாரு போல” என நெட்டிசன்கள் அந்த வாலிபரைக் கிண்டலடித்து வருகின்றனர்.
