சமூக வலைதளங்களில் தற்போது ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவரின் நேர்மை மற்றும் உழைப்பு குறித்த செய்தி பலரது இதயங்களை நெகிழ வைத்து வருகிறது. வினீத் என்பவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், தனது வீட்டிற்கு ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் பொருட்களை டெலிவரி செய்ய வந்த அஜித் என்ற ஊழியர், தனது சிறிய மகனை பைக்கின் முன்பக்கம் அமர வைத்துக்கொண்டு வேலை செய்ததைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.

அந்த ஊழியரின் கஷ்டத்தைப் பார்த்து அவருக்குப் பணமாக டிப்ஸ் (Tip) கொடுக்க வினீத் முயன்றபோது, அவர் அதனை மிகவும் கண்ணியமாக மறுத்துவிட்டார்.

“எனக்குப் பணம் வேண்டாம், எனது சேவைக்கு ஆப்பில் நல்ல ரேட்டிங் (Rating) கொடுத்தாலே போதும்” என்று அந்த ஊழியர் கூறியது வினீத்தை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கையில் குழந்தையை வைத்துக்கொண்டு உழைத்தாலும், யாரிடமும் கையேந்தாமல் தனது உழைப்பிற்கு அங்கீகாரம் மட்டுமே கேட்ட அந்த ஊழியரின் நேர்மையை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

ஸ்விக்கி நிறுவனத்திடம் இது குறித்து முறையிட்டுள்ள வினீத், அந்த ஊழியருக்கு வேறு ஏதேனும் வகையில் உதவ முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கஷ்டத்திலும் சுயமரியாதையை விடாத அந்தத் தந்தையின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.