டெல்லியில் லிவ்இன் பார்ட்னரான இளம் பெண் நிக்கி யாதவை கொலை செய்து அவரது உடலை பிரிட்ஜில் பதுக்கிய சாஹில் கெல்லட், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்த போது நிக்கி யாதவை யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையினர் விசாரணையில் சாஹில் தெரிவித்தார்.

அதன்பின் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தன் வீட்டார் வேறொரு பெண்ணை தனக்கு நிச்சயம் செய்ததாகவும், அப்பெண்ணுடன் திருமணம் முடிவானதாகவும் சாஹில் விசாரணையில் தெரிவித்தார். இதற்கிடையில் திருமணம் முடிவானதை அறிந்த நிக்கி யாதவ் தன்னிடம் தகராறு செய்ததால் அவரை தீர்த்துக்கட்ட தன் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் அளித்தார் சாஹில். அந்த வகையில் தந்தை வீரேந்தர், உறவினர்களான ஆஷிஷ், நவீன் மற்றும் இரு நண்பர்களுடன் சேர்ந்து கடந்த பிப்,.10 ஆம் தேதி நிக்கி யாதவை கொலை செய்து பிரிட்ஜில் பதுக்கி வைத்ததாக சாஹில் தெரிவித்தார்.

அதோடு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து கொலை செய்யவும், குற்றத்தை மறைக்கவும் உடந்தையாக செயல்பட்ட சாஹிலின் தந்தை வீரேந்தர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைச்சாலையில் அடைத்தனர்.