தமிழக சட்டசபை கூட்டணி நேரத்தின் போது உறுப்பினர்கள் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு அமைச்சர் துரைமுருகன் உங்கள் கோரிக்கையை நானும் ஏற்றுக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலினிடம் புதிய சட்டமன்றம் கட்டுவது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளேன் என்று கூறினார். அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர், ஆந்திரா மற்றும் கேரளாவில் சட்டமன்றங்கள் எப்படி இருக்கிறது என்று போய் பாருங்கள். ராஜ் பவன் நம்முடைய இடம்தான். அதை நான் வரலாறு படித்து தெரிந்து கொண்டேன். அந்த இடத்தை புதிய சட்டமன்றம் கட்டுவதற்கு எடுத்துக் கொள்ளலாம்.

இல்லையெனில் 700 ஏக்கர் இடம் கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் பணம் கட்ட முடியாத நிலையில் இருப்பதால் அதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்த இரு இடங்களில் முதல்வர் ஸ்டாலின் எந்த இடத்தில் புதிய சட்டசபை கட்டுவதற்கு ஒப்புதல் தருவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும் போது புதிய சட்டசபையை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

கலைஞர் ஆட்சி காலத்தில் புதிய சட்டசபை கட்டப்பட்ட நிலையில் அதன்பின் பொறுப்பேற்ற ஜெயலலிதா அதை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார். இதனால் ஓமந்தூரார் மருத்துவமனை புதிய தலைமைச் செயலமாக மாற்றப்படும் என தகவல்கள் பரவிய நிலையில் அது தொடர்பான எந்த எண்ணமும் தமிழக அரசுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் சென்னை ராஜ்பவனில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தால் ஆளுநர் ரவி ராஜ் பவனை காலி செய்வாரா என்ற ஒரு கேள்வியும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.