ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இறுதி சுற்று தற்போது ‌ முடிவடையும் நிலையில் இருக்கிறது. ஐபிஎல் பைனலில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்ற போது கடைசி பந்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலிக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையில் விராட் கோலி மும்பை அணிக்கு எதிராக தோல்வியடைந்த போது நவீன் டிவி முன்பு நின்று மாம்பழத்தை காட்டி ஸ்வீட் மாம்பழம் என ட்வீட் செய்தார். அதோடு ஆர்சிபி பிளே ஆப் சுற்று தகுதியை இழந்த போதும் வாய்விட்டு சிரிக்கும் புகைப்படத்தை நவீன் வெளியிட்டிருந்தார். இது ஆர்சிபி மற்றும் கோலி ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் நடந்த எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ தோல்வியடைந்தது. இதன் காரணமாக நவீன் மற்றும் லக்னோ அணியை தற்போது ரசிகர்கள் மாம்பழத்தை வைத்து இணையதளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.

இதனால் லக்னோ அணி நிர்வாகம் மாம்பழம் என்று வரும் வார்த்தைகளை மியூட் செய்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது லக்னோ அணியை கிண்டல் செய்யும் விதமாக ஸ்விகி நிறுவனமும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், லக்னோ அணி வீரர்களே டென்ஷன் வேண்டாம். நாங்கள் டிஷ்யூ பேப்பர் ரெடி பண்ண ஆரம்பித்து விட்டோம் என்று பதிவிட்டுள்ளனர்.

மேலும் மும்பை அணியை சேர்ந்த குமார் கார்த்திகேயா, சந்தீப் வாரியர், விஷ்ணு வினோத் ஆகியோர் 3 மாம்பழங்களை மேஜையில் வைத்து இனி மாம்பழங்களை பார்க்க மாட்டோம், சாப்பிட மாட்டோம், பெயரை கூட கேட்க மாட்டோம் அமைதியாக இருப்போம் என்று ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தனர். இந்த புகைப்படத்தை மும்பை அணி வீரர்கள் டெலிட் செய்த நிலையிலும் அதை ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து நவீனை கலாய்த்து வைரலாக்கி வருகிறார்கள்.