தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்யும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதேநேரம் இந்த பாடல் போதைப்பொருளை ஊக்கவிக்கும் அடிப்படையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடல் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இப்பாடல் போதைப் பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் விதமாகவும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளதால் தடைசெய்ய வேண்டும் என சென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகாரளித்துள்ளார். தமிழ்நாடு அரசும் காவல்துறையும் போதைப்பொருள் சம்மந்தமாக விழிப்புணர்வு நடத்தி வரும் சூழலில், ரவுடிசத்தை ஊக்கவிக்கும் விதமாக இப்பாடல் இடம்பெற்றிருப்பதால் விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.