உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் ஹரையா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஜ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (21). கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அதே பகுதியில் உள்ள மகாதேவ்ரி கிராமத்தைச் சேர்ந்த குஷி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, குஷி தனது பெற்றோரிடம் திரும்பி சென்று விட்டார். இதனை தொடர்ந்து ராஜ் பலமுறை மாமியார் வீட்டிற்கு சென்று தனது மனைவியை அழைத்து வர முயன்றும் அவர்கள் அவரது வேண்டுகோளைக் ஏற்கவில்லை.

இந்தநிலையில், மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் ராஜிடம் ஒரே ஒரு நிபந்தனையை வலியுறுத்தினர். அதாவது, தனது மனைவி குஷியின் பெயருக்கு நிலத்தை மாற்ற வேண்டும். இதற்கான மன அழுத்தமும், மிரட்டல்களும் அதிகரித்த நிலையில், ‘அது செய்யாவிட்டால் குஷியை கர்ப்பமாக்கி, பின்னர் கருக்கலைப்பு செய்கிறோம்’ என மிரட்டியதாக ராஜ் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலைமையில் மனஅழுத்தத்திற்கு ஆளான ராஜ், தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

தற்கொலைக்கு முன் ராஜ், ஒரு வீடியோ பதிவு செய்து, அதில் தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை, அவர் விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை ஹரையா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் உடல்நிலை மோசமடைந்ததால், மேலதிக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், ஹரையா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், ராஜ் எழுதிய கடிதம் மற்றும் வீடியோ ஆதாரங்களை வைத்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதில் திருமண அழுத்தம், சொத்துக் கோரிக்கைகள், குடும்ப உறவுகளின் தலையீடு ஆகியவை இன்னும் பல இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கும் நிலையில், இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.